ராகு காலம், எம கண்டம் அறியும் வழி

காலண்டரை பார்க்காமலே ராகு காலம், எம கண்டம் அறியும் வழி

பொதுவாகவே, வெளியே செல்லும்போதோ, சுபகாரியம் செய்யும் போதோ ராகு காலம், யமகண்டம் பார்ப்பது பலருக்கும் வழக்கம்.

ஒவ்வொரு நாளுக்கும் உரிய ராகு காலம், யமகண்டத்தை எளிதாக அறிந்துகொள்ள சுலபமான வழி உண்டு.

அதற்கு, கீழ்க்கண்ட வாக்கியத்தை முதலில் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும்.

"திருநாள் சந்தடியில் வெயிலில் புறப்பட்டு விளையாடச் செல்வது ஞாயமா?"

இந்த வாக்கியம், ராகுகாலத்தினை அறிவதற்கானது. வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளில் முதல் எழுத்துகளை, கிழமைகளின் முதல் எழுத்தாக கொள்ளுங்கள்.

முதலில் திங்கட்கிழமையில் காலையில் 7.30 மணி முதல் 9 மணி வரை ராகுகாலம் அமையும். அதுமுதல் அடுத்தடுத்துள்ள நேரத்திற்கு உரிய தினம் எது என்று தெரியுமா?

திங்கள்:7.30-9.00;
சனி:9.00-10.30;
வெள்ளி: 10.30-12.00;
புதன்:12.00-1.30;
வியாழன்:1.30-3.00;
செவ்வாய்: 3.00-4.30;
ஞாயிறு: 4.30-6.00.

மேற்கண்டவாறு மனப்பாடம் செய்து கொண்டால் காலண்டரைப் பார்க்காமலே சட்டென்று ராகு காலம் சொல்லிவிடலாம்

அடுத்தது, யமகண்டத்திற்கான
வாக்கியம்

விளையாட்டாய் புண்ணியம் செய்தாலும் திருவருளை ஞானமும் சத்தியமும் வெளிப்படுத்தும்.

யமகண்டம் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் 7.30 மணி வரை அமையும். இந்த வாக்கியத்தில் உள்ள முதல் எழுத்து வரிசைப்படி கிழமைகள் அடுத்தடுத்துவர, அடுத்தடுத்த 1.30 மணி நேரம் யமகண்டமாகும்.

வியாழன்: 6.00-7.30;
புதன்: 7.30-9.00;
செவ்வாய்: 9.00-10.30;
திங்கள்: 10.30-12.00;
ஞாயிறு: 12.00-1.30;
சனி: 1.30- 3.00;
வெள்ளி: 3.00-4.30.

என்ன... இனிமேல் ராகுகாலம், யமகண்டம் பார்ப்பது சுலபம்தானே!