பயிற்சி தேவை

தாத்தாவும்   பேரனும். 

''தாத்தா  இன்னிக்கி உங்க  கிட்ட சில  விஷயம்   கேக்கப்  போறேன்.''

சரிடா  கோபு   கேளு.

என்  புத்தகத்தில்  ஐம்புலன்களை அடக்க வேண்டும்  என்று  படித்தேன்  புரியவில்லை.   அது பற்றி சொல்லுங்க.

நமது  மனம்   போன  போக்கெல்லாம் போக வேண்டாம்   என்று  படித்திருக்கிறாயே  அது   தான். மனம்  தான்  முதலில் கட்டுபாட்டுக்குள்  வரவேண்டும். மற்றதெல்லாம் -கண்,  மூக்கு, வாய்,  செவி, நாக்கு   எல்லாமே  வழிக்கு தானே   வந்துவிடும்.
அதுக்கு  உனக்கு   ஒரு கதையா சொல்லட்டுமா.  புரியும்.  

ராமர்  காட்டில்  இருக்கும்போது  ஒரு  ஆற்றங்கரையில் அதுவரை பார்த்திராத துறவி ஒருவரைப் பார்த்தார். ஆச்சார சீலராகக் காட்சி தந்தார் அவர்.

ஆற்றில் மூழ்கி தனது அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, பிறகு ஜபம் செய்யத் தொடங்கினார் துறவி. சிறிது நேரத்தில், ஹோமம் செய்வதற்கான சமித்துகளை எடுத்துக் கொண்டு அமர்ந்தார். சரி இவர் வேள்விதான் செய்யப் போகிறார் என்று எண்ணி, ஓர் ஓரத்தில் அமர்ந்து அவர் செய்வதை கவனித்தார் ராமபிரான்.

துறவியோ, கையில் வைத்திருந்த துணி மூட்டையில் இருந்து,  கோதுமை  மாவு எடுத்து பாத்திரத்தில் இட்டுப் பிசைந்து, சமித்துகளில் தீ மூட்டி, ஆறு ரொட்டிகளைச் சுட்டார். இரண்டில் தேனும், இரண்டில் நெய்யும், மீதி இரண்டில் ஊறுகாயும் தடவி வைத்தார். பிறகு மீண்டும் ஜபம் செய்தார். சிறிது நேரம் சென்றது. கண்திறந்த துறவி, ரொட்டிகளை எடுத்து வைத்து, சாப்பிட அமர்ந்தார்.

அந்த நேரம், பசியால் வாடிய பெரியவர் ஒருவர் அவ்வழியே வந்தார். பார்க்க பரிதாபமாக இருக்கவே, துறவி அவரை அழைத்து, ஊறுகாய் தடவிய ரொட்டிகளைக் கொடுத்து உண்ணச் சொன்னார். மீண்டும் கண் மூடி தியானத்தில் ஆழ்ந்தார்.

திரும்பவும் கண்விழித்து எழுந்து, தேன் தடவிய இரண்டு ரொட்டிகளை எடுத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தார். அந்த நேரம் வாடிய நிலையில் ஒரு சிறுமி அவ்வழியே வந்தாள். அவளைப் பார்த்து இரக்கப்பட்ட துறவி, அந்த ரொட்டியை அவளுக்குக் கொடுத்து சாப்பிடச் சொன்னார். பிறகு மீதி இருந்த நெய் தடவிய ரொட்டியை எடுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றார். ரொட்டிகளை சிறிதுசிறிதாகப் பிய்த்து, மீன்களுக்குப் போட்டார். பிறகு திரும்பி வந்து, சமித்துகள் எரிந்த சாம்பலை எடுத்து பாத்திரத்தில் வைத்து, ஆற்று நீரை அதில் சேர்த்து, சாம்பலைக் கரைத்து குடித்துவிட்டு அமர்ந்தார்.

துறவியின் இந்த செய்கை, ராமபிரானுக்கு ஆச்சரியத்தை அளித்தது. நேரே துறவியிடம் சென்று அவர் செய்கைக்கான காரணத்தைக் கேட்டார்.

துறவி சொன்னார்: ”ஸ்நானம் செய்து முடித்து ஜபத்தில் அமர்ந்தேன். அப்போது, பையில் இருந்த மாவுதான் நினைவுக்கு வந்தது. அந்த மாவினை ரொட்டி சுட்டு, தேனும் நெய்யும் கலந்து சாப்பிட வேண்டும் என்று மனது ஆசைப்பட்டது. அந்த மனதை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக ரொட்டி சுட்டேன்…”

”ரொட்டி சுட்டீர்கள் சரி… ஆனால் நீங்கள் ஏன் அவற்றை உண்ணவில்லை ?” – கேட்டார் ராமபிரான்.

”துறவி என்பவன் புலன்களை அடக்க வேண்டும். எவ்வளவோ முயற்சி செய்து அடக்கினேன். ஆனால், மனது மட்டும் அவ்வப்போது அடம் பிடிக்கிறது. அதன் போக்கில் விட்டு, பிறகுதான் அதற்கு தண்டனை தரவேண்டும். சாம்பலாகப் போகும் இந்த உடலுக்குள் இருந்து கொண்டு, என்னமாய்ப் படுத்துகிறது இந்த மனது?! அதனால், இந்தச் சாம்பல்தான் இன்று ஆகாரம் என்று மனதுக்குக் கட்டளையிட்டு அதையே சாப்பிட்டேன். இதுதான் அடங்க மறுக்கும் மனத்துக்கு அடியேன் அளிக்கும் தண்டனை!” என்றார் மெதுவாக!

 நல்ல கதை  தாத்தா. மனத்தை  அடக்க   எப்படி  பயிற்சி செய்யவேண்டும்?

எண்ணங்களை சீர்  செய்துகொள்ளவேண்டும்.  மனதுக்கு   அலைபாயாத  பழக்கம்  தரவேண்டும்.  இதற்கு தான்  த்யானம், ஜபம்  பாராயணம்,  பஜனை,   சத்சங்கம் எல்லாம்  வைத்திருக்கிறார்கள்.   தனியாக இருக்கும்போது   எண்ணம்  எங்கெங்கோ ஓட்டும்.  நல்ல   விஷயங்களை மற்றவர்களோடு  பரிமாறிக்கொள்ளும்போது  அதற்கு வேறு  இடம்  தாவ சந்தர்ப்பம்  கிடைக்காது.  படிக்கும்போதும்  மனதை  அதில் செலுத்தி    படிக்கவேண்டும்,  நல்ல  விஷயங்களை  கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்

தாத்தா  இதற்கு  ஒரு  குருவின்  உதவி  அவசியமில்லையா?

கோபு ,  இதே கேள்வியை  ஒரு  பக்தர் ரமண  மகரிஷியிடம் கேட்டதற்கு  அவர்   சொன்ன பதில்: 

'' நீ  இப்போது  குருவிடமிருந்து தள்ளிப்போய்   எங்கோ   தூர  இருப்பதாக  எண்ணமா?'' என்றார் 

அதற்கு  அந்த பக்தர் '' சுவாமி  அந்த  குருவின் அருகில் இருப்பது  அவசியமில்லையா'' ?''

''நீ  என்ன  சொல்ல வருகிறாய்.  அந்த  குருவின்   உடலும் உன்  உடலும்  அருகில்  இருக்க வேண்டாமா  என்று .  அதால் என்ன  பிரயோஜனம்?  மனமல்லவோ  குருவின் மனதுடன்  சேர்ந்திருக்க வேண்டும் ''  என்றார்.  அப்படி  இறைவனின்  மேல்  மனதை நாட்டம் கொள்ள செய்வதற்கு   தான்  சத்சங்கம்,   பூஜை ,  பஜனை, பிரசங்கம்,  பாராயணம் என்று   எத்தனையோ வழிகள் உள்ளன.   அதில்  ஒன்று  மனதை அவன் பால்   செலுத்தி த்யானம் பண்ணுவது.   மௌனமாக உள்ளே  அவனைக்  காண்பது.

இதெல்லாம்  எல்லோராலும் முடியுமா தாத்தா?

எல்லோராலும்  எதெதுவோ  செய்ய முடிகிறபோது  இது மட்டும்  முடியாமலா  போகும். பயிற்சி  தேவை.   நீ எப்படி  இப்போது  9 வது  படிக்கிறாய்.  எட்டு  வருஷம் படித்தபிறகு தானே.  அது  போல் தான்.''

Thanks to Sivan Krishnan