குளிக்கும் முறை ( அகத்தியர் கூற்று )

குளிக்கும் முறை  (  அகத்தியர் கூற்று )

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள்.

 (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம்.  மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும்).

தினமும் கங்கா ஸ்நானம் செய்யமுடியும்.  குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிரவிரலால் "ஓம்" என்று த்யானம் செய்து எழுதுங்கள்.  அந்த நீர் அப்போதுமுதல் கங்கை நீராக மாறிவிடும்.

ஒரு நிமிட த்யானத்தில் "இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று இறையிடம் வேண்டிக்கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும்.  குளிப்பது, உண்மையிலேயே நாமாக இருக்காது.

அக்னி எப்போதும் மேல்நோக்கியே பயணிக்கும்.  உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல்  ஏறுவதுதான் சரி.

  தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும்.

நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்குகிற சக்தி உண்டு.

  காலிலிருந்து பரவும் குளிரிச்சி மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும்.  அதுவே சரியான முறை.

 தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை "பிரஷ்டம்" என்பர்.  அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது.  அங்கு தான் அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும்.

ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைதான் துவட்ட வேண்டும்.

துவலையை (துண்டு) குளிக்கும் நீரிலே நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உத்தமம்.  அனேகமாக, அனைவரும் ஈரம் படாத துண்டைத்தான் உபயோகிப்பீர்கள்.  உலர்ந்த துணியானது உள் சூட்டை வேகமாக பரவச்செய்து பல வித உள் நோவுகளை உருவாக்கும்.

பிறருடன் வாய் திறந்து பேசக்கூடாத மூன்று நேரங்களில் ஒன்று, குளிக்கும் நேரம்.  மௌனத்தை கடைபிடிக்கலாம், அல்லது மனதளவில் தெரிந்த ஜெபத்தை செய்யலாம்.

         குளிப்பதினால், பஞ்ச இந்த்ரியகளால் செய்த தவறுகளினால் நமக்குள் சேர்த்து வைத்துள்ள கர்மாக்கள் களையப் பெறுகிறது.

 தண்ணீர் உடலை தழுவி, கழுவி சுத்தப்படுத்தி, நம்மை, நம் மூலத்திற்கு அழைத்துச் செல்லுகிறது.  குளித்தபின் நாம் இருக்கும் நிலையே மனிதனின் சுத்த நிலை.  அதை உணரவேண்டும்.

குளிக்கும் போது, வாயில் கொள்ளளவு நீரை வைத்து குளித்தபின் துப்புவதால், கண்டத்துக்குமேல் (கழுத்துக்கு) வருகிற நீர் சம்பந்தமான கட்டுகளை, நோய்களை தவிர்க்கலாம்.  வாயில் இருக்கும் நீர் மேல் நோக்கி எழும்பும் அக்னியின் வேகத்தை எடுத்துவிடும்.

நீர் நிலைகள், குளம், ஆறு, கடல் இவைகளில் எல்லா தேவதைகளும், பெரியவர்களும் அரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறுகிறார்கள்.  நாரம் என்கிற தண்ணீரில் நாராயணன் வாசம் செய்வதாகவும் சொல்வார்கள்.

ஆதலால், ஓடி சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்கவேண்டும்.

நீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோ கூடாது.  நீரின்றி ஒரு உயிரும் இல்லை.

நீரை விரயம் செய்ய கடன் அதிகரிக்கும்.
உப்பு நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களை அறுக்கும்.  வெள்ளியன்று குளிப்பது நல்லது.